புத்தாண்டு ராசி பலன் - கன்னி
கஷ்டப்படுபவர்களுக்காக சிந்திக்கும் நீங்கள் குதூகலமடையும் ஆண்டாக இருக்கும். அறிவுக்கு அதிபதியான புதன் கிரகத்தின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் எவர் சொல்லுக்கும் அடங்கும் தன்மையற்றவர்கள். எடுத்தார் கைப்பிள்ளையாக எப்போதும் இருக்க மாட்டீர்கள். சுயமாக சிந்தித்து சரியென பட்டால் மட்டுமே களத்தில் இறங்குவீர்கள். நல்லவருக்கு நல்லவராக நம்பி வருபவர்களுக்கு தோள்கொடுக்கும் தோழியாக இருப்பீர்கள். ராசிக்கு பதினோராமிடத்தில் ராகுவும் ஐந்தாமிடத்தில் கேதுவும் உலாவுவது உங்களுக்கு சாதகமான விஷயம்தான் என்றாலும் சகோதர வழி பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களால் தேவையற்ற பிரச்னைகள் எழ வாய்ப்புள்ளது எனவே கவனமுடன் இருப்பது நல்லது. உழைப்பிற்கு மீறிய வருமானங்களால் வங்கி சேமிப்புகள் உயரும். சிலருக்கு தகப்பனாரின் உடல்நல பாதிப்புகள் மருத்துவசெலவுகள் மேலோங்கும். குருபகவான் சாதகமாக இயங்க இருப்பதால் எவரையும் மதிக்காத அளவுக்கு தலைக்கணம் வரும் வாய்ப்புள்ளதால் உறவினர்களிடம் கெட்டபெயர் வாங்கவேண்டிவரும். ஓவர் ஸ்மார்ட் எதிர்கால வாழ்க்கைக்கு ஆகாது என்பதை புரிந்து செயல்படுங்கள். ‘அப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்.!’ -என்பது உங்களுக்கு பொருந்தும் காலமாக இருப்பதால் தன்னடக்கத்தோடு நடந்து நல்ல பெயர் வாங்குங்கள்.
பெண்களின் புதிய தொழில் முயற்சிகள் வெற்றிகரமாக இருக்கும். வண்டி வாகனங்கள் வாங்கும் முடிவுகள் சாதகமாக இருக்கும். கல்வியில் பிள்ளைகள் வெளுத்துக் கட்டுவார்கள். அரசுப் பணியாளர்கள் எதிர்பார்க்கும் இடங்களுக்கு இடமாறுதல்களும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். வணிகர்கள் தங்கள் கடைகளின் கிளைகளை விரிவுபடுத்தும் அளவுக்கு வியாபாரமும் வருமானமும் பெருகும். திருமண வயதை கடந்து விட்ட மகளுக்கு நல்லவரன் அமைந்து கெட்டிமேளச் சத்தம் வீட்டில் கேட்கும். சனி பார்த்தால் சிக்கலையும் சிரமங்களையும் தருவார், குருபகவான் பார்த்தால் கோடான கோடி நன்மைகளை அள்ளித் தருவார் என்றெல்லாம் படித்திருப்போம். அந்த குருபகவானின் நேரடி பார்வையிலேயே உங்கள் தொழில்ஸ்தானாதிபதி இருப்பது, போன ஜென்ம புண்ணியம் என்றுதான் சொல்ல வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள் இந்த வரிசையிலும் மூன்றாவது வருபவர் குருதான். மூன்றுக்கும் உங்களுக்கும் அப்படியொரு சம்மந்தம் இருக்கும். வீடும் மூன்று, தொழிலும் மூன்று, வருமானமும் மூன்று என்று எல்லாம் மூன்றாக இருந்தாலும் இல்லறத்தில் ஒருவருக்கு ஒருவர் என வாழ்க்கையை தெளிவாக அமைத்துக் கொள்வீர்கள்.
தெய்வத்திற்கும் மேலானவராக நாம் குருவைத்தான் கருதுகிறோம். சமூகத்தில் மதிப்பு மரியாதைகளைத் தேடி நீங்கள் போகிறவரல்ல ஆனால், அனைத்தும் உங்களைத் தேடி வலிய வரும். சுப மற்றும் அசுப காரியங்கள் எதுவாக இருந்தாலும் உங்களை முன்னால் உட்கார வைத்துத்தான் அனைத்துப் பேச்சு வார்த்தைகளும் நிகழும். பி.எட்., படித்து விட்டு காத்திருப்போருக்கு ஆசிரியர் பணி அமையும். புதிதாக பள்ளி, கல்லூரிகள் துவங்கும் முடிவில் இருப்பவர்களுக்கு அதற்குண்டான காலச்சூழல்கள் சரியாக பொருந்தி வரும். மதகுருமார்கள் தங்கள் மதிப்புகளை உயர்த்திக் கொள்ளும் விதமாக நடந்து கொள்வார்கள். புதிய ஆன்மிக ஸ்தலங்கள் கட்டும் முடிவில் இருப்பவர்கள் அதற்குண்டான ஏற்பாடுகளில் பரபரப்பாக இருப்பார்கள். வாரிசுக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை உண்டு. புத்தகம் மற்றும் பத்திரிக்கையில் பணிபுரிகிறவர்கள் சமூக அந்தஸ்தைப் பெறுவார்கள்.
கருத்துகள் இல்லை